Saturday 24 November 2018

சென்னை to மேகமலை - 

பைக்கர் மேனியா! Sep-2013


அசல் ஆஃப் ரோடிங் பயணம் செய்ய வேண்டும். வார விடுமுறையில் தென்மேற்குப் பருவ மழையில் நனைய வேண்டும் என முடிவு செய்தபோது நினைவுக்கு வந்தது, தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை. சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மொத்தம் 15 பைக்குகள், ஒரே ஒரு காருடன் பயணம் தொடங்கியது.
 திட்டமிட்டபடி நால்வழிச் சாலையில் நிதானமாக மிதந்து, சேலத்தில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு... கரூர், திண்டுக்கல் வழியாக தேனி, சின்னமனூரை சனிக்கிழமை மதியம் அடைந்தோம்.
மேகமலையில் இரவு உணவுக்குத் திட்டமிட்டு, அதற்குத் தேவையான சமையல் பொருட்களை வாங்கிக்கொண்டு மலைப் பாதையை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றோம். குண்டும் குழியுமான, வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை போன்ற சாலையில் மிகக் கவனமாக மேலேறினோம். ஆனால், கார்தான் மிகவும் சிரமப்பட்டது.
தென்றலாக வீசிய பருவக்காற்று; ரோமத்தைச் சிலிர்க்க வைத்து மெய் தீண்டும் இதமான மழைச் சாரல்; மாலைப் பொழுதை மயங்க வைக்கும் கருமேகங்களால் சூழ்ந்த சூரியனின் வெண்மையான ஒளிக் கற்றை; பச்சைப் பசேலென்று வளர்ந்த மரங்கள்; குறுகலாக வளைந்து நெளியும் மலைப் பாதை; தோட்டத்தில் மேயும் ஆட்டு மந்தைபோல பைக் கூட்டம்; குண்டும் குழியுமான, சேறும் சகதியுமான ஆஃப் ரோடிங் பயணம்... எல்லையில்லா உற்சாகத்தோடு மேகமலையை அடைந்தோம்.
மேகமலையில், மழைச் சாரல் பெரு மழையாக மாறியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரம். வெப்பநிலை வேகமாகக் குறைந்து கொண்டே வந்தது. அங்கு இருந்த ஒரு சின்னக் கடை ஒன்றில் அனைவரும் தொடர்ச்சியாக 'டீ’ குடித்து, அங்குள்ள ஸ்நாக்ஸ் வகைகளையும் காலி செய்துவிட்டோம். இரவு நெருங்கியது. சூரியன் முழுமையாக மறைந்துவிட்டது. ஆனால், விடாத கன மழை. கூடாரம் அமைத்து, விறகுகள் தேடிச் சமைப்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட... 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!’
டீக்கடைத் தாத்தா மற்றும் ஊர் மக்களை அணுகினோம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அல்லவா? பண்பாடு, விருந்தோம்பல், சற்றும் நலிவடையவில்லை என்பதற்குச் சான்றாக இருந்தனர் மேகமலை கிராம மக்கள். குளிரில் மிகவும் அவதிப்பட்ட இருவரை தங்கள் வீடுகளில் தங்க வைத்தனர். ஊர் கவுன்சிலர் உதவியோடு கிராம சமுதாயக் கூடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கிடைத்தது.
இரவு உணவு இல்லாமல் உறங்க வேண்டிய சூழ்நிலையில், ஊர்மக்களின் பரிவு நெஞ்சை நெகிழ வைத்தது. டீக்கடைத் தாத்தா அவருடைய அடுப்பை வழங்க, ஊர் மக்களிடம் இருந்து விறகுகளை வாங்கிச் சமைக்கத் தொடங்கினோம். சுமார் நள்ளிரவு 12 மணிக்கு சூடான, சுவையான சாப்பாடு தயார். இரவு உணவு முடித்து கொஞ்சம் தூங்கினோம்.
காலையில் ஊர் மக்களோடு உரையாடினோம். மேகமலையின் முக்கிய தொழில் டீ எஸ்டேட்தான். பெரும்பாலும் மழை பெய்து கொண்டே இருப்பதால், மேகமலை என்ற பெயர் பொருத்தம்தான். பைக்குகளில் மேகமலையை வலம் வந்தோம். ஓயாத மழை, வழி நெடுகிலும் எண்ணற்ற ஏரிகள். ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி. எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு உற்சாகமாக இருந்தோம். ஆனால், வீட்டுக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. வந்த திசையை நோக்கிப் புறப்பட்டு அதிகாலையில் சென்னையை அடைந்தோம்.
(ட்ரிப் அடிப்போம்)
பயணத் திட்டத்துக்கு முன்பே பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எதிர்பாராமல் பைக்கில் ஏதாவது பிரச்னை என்றால், அருகே உள்ள சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டு, குழுவுடன் பயணத்தைத் தொடர வேண்டும். நெடுஞ்சாலை, சின்ன சாலை எதுவாக இருந்தாலும்... பைக்குகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதுதான் பாதுகாப்பு. மேலும், குழுவின் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்துகொள்வது முக்கியம்!
அயன் பட், பன் பர்னர் என பைக்கில் சாதனை செய்த பூங்கதிர்வேலனை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. போரடிப்பதாகத் தோன்றினாலே, பைக்கை எடுத்துக்கொண்டு தனியாகவோ அல்லது குழுவாக ஏதாவது ஒரு புதிய இடம் தேடிச் செல்லும் பூங்கதிர்வேலன், தான் சென்றுவந்த இடங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார். 
 இவரது அனுபவம், பைக் பிரியர்களுக்கும் பயண விரும்பிகளுக்கும் நிச்சயம் ஒரு வழி காட்டியாக இருக்கும்.

No comments:

Post a Comment