Saturday 24 November 2018

மறக்க முடியாத குடகு!  
பைக்கர் மேனியா! Dec-2013

இந்த முறை குடகுமலைப் பயணத் திட்டம் தயாரானதும் 12 பைக்குகள், இரண்டு கார்கள் சேர்ந்துவிட்டன. கூட்டமாகச் சென்றால், அத்தியாவசியமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கூடுதல் அவசியமானது. சென்னை, கோயம்பேட்டில் மாலை 5.30 மணிக்கு ஒன்றிணைந்து, பயணத்தைத் துவக்கினோம்.
 மதுரவாயல், பூந்தமல்லி நகர நெருக்கடிகள் கடந்து காஞ்சிபுரம் டோல்கேட்டை எட்டியபோது இரவு 7 மணி. சென்னை - பெங்களூரு ஹைவே பயணத்தில் மிஸ் பண்ணக் கூடாதது, ஆம்பூர் பிரியாணி. ஆம்பூரை அடுத்த டோல்கேட்டில் இரவு உணவை முடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
கிருஷ்ணகிரி அருகே எதிர்பாராதவிதமாக ஒரு பைக் பஞ்சர் ஆகிவிட... மற்ற பைக்குகளை பெங்களூரு டோல்கேட்டில் காத்திருக்கச் சொல்லி விட்டு, பஞ்சர் கடையைத் தேடிக் கண்டுபிடித்து, கடைக்காரரை எழுப்பிச் சரிசெய்து பெங்களூரு சேரும்போது, நள்ளிரவு 2 மணி. நைஸ் ரோடு வழியாக மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் நுழைந்தோம். பெங்களூர் - மைசூர் ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர்கள் ஏராளம்.பில்லியன்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மைசூருக்கு முன்பாக, ஆலமரத்தின் கீழே அனைவரும் குட்டித் தூக்கத்தைப் போட்டோம். சூரியன் உதயமானதும் சூடாக டீ குடித்துக் கிளம்பினோம். வழி நெடுகிலும் ஆற்றுப் பாலங்கள். செழிப்பான வயல்வெளிகள். குடகுமலை நுழைவாயிலான குஷால் நகரில் அழகான, தனிமையான இடம் 'திபெத்தியன் செட்டில்மென்ட்.’ மொத்தக் குழுவும் அங்கிருந்த தங்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். மிக அமைதியான இடத்தில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்து, துபாரே யானைகள் முகாம். மடிகேரி செல்லும் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, செந்நிறத்தில் சீறிப் பாயும் காவிரி ஆற்றின் ஓரமாக 12 கி.மீ சென்றால், கர்நாடக மாநிலத்தின் வன விலங்குப் பாதுகாப்பு துறையின் யானைகளின் உறைவிடம்.  படகில் ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் சென்றால், (காலை, மாலையில் மட்டும்) நாமே யானைகளுக்கு உணவளிக்கலாம் அல்லது யானைகள் ஆற்றில் குளிப்பதை ரசிக்கலாம். லேசான சாரலில் நனைந்தபடியே மலைப் பாதையில் ஏற ஆரம்பித்தோம். அடுத்த 30 கி.மீ தூரத்தில் கூர்க்கின் மடிகேரி.
மாலை 5.00 மணி அளவில், ஏராளமான டேக் டைவர்சன்ஸ் கடந்து, அபே அருவியை அடைந்தோம். பற்கள் டைப்ரைட்டிங் அடிக்க, மழைச் சாரலில் நனைந்தபடியே காட்டு வழியில் நடந்து அருவியை அடைந்தோம். மிரட்டலான அருவி. ஆனால், குளிக்க வசதி இல்லை. சூரியனும் மறைந்தது; அடர்ந்த வனப் பகுதியில் பயணத்தைத் தொடர்வது சிரமம். அதனால், அருகில் இருந்த கடை உரிமையாளரிடம் அனுமதி கேட்டு, இரவை அங்கேயே கழித்தோம்.
அதிகாலை விழித்துப் பார்க்கும்போது, பனி படர்ந்து அடர்ந்திருந்தது. அருமையான சூழல். இரவு தங்கியிருந்த மலை முகப்பின் ஒருபுறம் 1,500 அடி பள்ளம்; மறுபுறம் உயர்ந்த மலை. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி கொடிகள், மரங்கள். கண்களுக்குத் தென்படும் தூரம் வரை இயற்கையைத் தவிர வேறு யாருமே இல்லை. உற்சாகத்தோடு அனைவரும் பைக்கை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் வட்டமடிக்க ஆரம்பித்தனர்.
மீண்டும் மடிகேரி வந்தபோது, 'நேர்வழியில் சென்னை திரும்பினால், த்ரில் இருக்காது. அதனால், ரூட்டை மாற்றிப்   பயணிக்கலாம்’ என்று குரல்கள் ஒலித்தன. அதனால், மைசூர் கடந்து நஞ்சன்கூடு வழியாக குண்டல்பேட் தாண்டி, 'பந்திப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் வரவேற்பு வளைவை அடைந்தோம். பந்திப்பூரில் மான்களும் மயில்களும் சாலையில் விளையாடிக்கொண்டிருக்க... உற்சாகம் கரை புரளத் துவங்கியது. அடுத்து, 'முதுமலை வனவிலங்குக் காப்பகம்’. பைக்குகள் மெதுவாக ஊர்ந்து செல்ல... சாலைக்கு மிக அருகே கோபமான இரண்டு காட்டு யானைகள். படம் எடுக்க முயற்சிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால், மெதுவாக யானைகளைக் கடந்தோம்.
மசினகுடி நீரோடையில் அனைவரும் இதமான குளியலோடு மதிய உணவை முடிந்தோம். மசினகுடி - ஊட்டி சாலை செங்குத்தான மலைப் பாதை. பைக்குகளும் கார்களும் மிகச் சிரமப்பட்டு மெதுவாக ஏறிக்கொண்டிருந்தன. ஊட்டியை நெருங்க நெருங்க குளிரின் தாக்கம் அதிகமானது. மாலை 5.30 மணிக்கு ஊட்டியை அடைந்தோம். ஊட்டி குளிரில் அனைவரும் ரைடிங் சூட்டிற்கு மாறிவிட்டனர்.
மேட்டுப்பாளையம் வரை மெதுவாகச் செல்ல... அவினாசியில் ஹைவே தென்படவும் வேகமெடுத்தன பைக்குகள். 11 மணிக்கு சேலத்தில் இரவு உணவை முடித்துவிட்டு, ஒரு தூக்கம். அதிகாலை 4 மணிக்கு பைக்குகள் சென்னையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தன. இரண்டு நாட்களில் சுமார் 1,500 கிமீ தூரம் பயணம். எங்கு ஆரம்பித்தோம்; எந்த வழியாகச் சென்றோம் என்பதை, கூகுள் மேப்பில் பார்க்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி அலாதியானது!

No comments:

Post a Comment